Sunday, July 3, 2011

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்



தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்


தமிழ்நாட்டில் இப்போது தென்மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது.


ஆனால் போதிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. அரபிக்கடலில் இருந்து வரக்கூடிய காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ளது.
 
அதன்காரணமாக தமிழ்நாட்டில் வழக்கமான கோடை போய், மீண்டும் 2-வது கோடை காலம் வந்துவிட்டது போல கடந்த 10 நாட்களாக வெயில் வறுத்து எடுத்தது. பகலில் வெயில் அதிக கடுமையாகவும் இரவில் காற்று குறைவாகவும் இருந்தது.

இதனால் மின் விசிறிகூட அதிக வெப்பத்தைதான் கக்கின. அதன் காரணமாக நிம்மதியான தூக்கம் வராமல் சிரமப்பட்டனர்.

 

அதற்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் மழைபெய்தது.

நேற்று முன்தினம் திருவள்ளூரில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. சென்னை விமானநிலையம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், பரங்கிப்பேட்டை தலா 4 செ.மீ., செம்பரம்பாக்கம் 3 செ.மீ., நுங்கம்பாக்கம், தேன்கனிக்கோட்டை தலா 2 செ.மீ., காஞ்சீபுரம், திருத்தணி, பூண்டி தலா 1 செ.மீ.பெய்துள்ளது.

சென்னையில் நேற்று காலை சில பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், திருவான்மியூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

 

இன்றைய வானிலை குறித்து வானிலை அதிகாரி கூறுகையில், `தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைபெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்ய வாய்ப்பு உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment