Sunday, July 3, 2011

ஜெ. அதிரடி : விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது



ஜெ. அதிரடி :  விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது

அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையாவின் பதவி பூலித்தேவன் விழாவில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பியபோதுதான் பறிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று மாலையில் நடந்தது. நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட விழாவையொட்டி நடக்கும் முக்கியமான அரசு விழாவாகும் இது.

இதில் பங்கேற்பதற்காக செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் நெல்லை வந்திருந்தார். நேற்று காலையில் சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி, அமைச்சர் சுப்பையா ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டார்.

பின்னர் மதியம் நெற்கட்டான்சேவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.


அந்த விழாவில் மூவரும் அமைச்சராக பங்கேற்றனர். சுப்பையா அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டு நெல்லையில் மாலையில் நடக்கும் அரசு பொருட்காட்சிவிழாவில் பங்கேற்க வருவதாக கூறிவிட்டு சென்றார்.


அவர் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியானது. சுப்பையாவிடம் பறிக்கப்பட்ட பதவி சற்று முன்னருடன் அவருடன் இருந்த அமைச்சர் செந்தமிழனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.


மாலையில் அரசு விழாவிற்கு வருவதாக கூறிவிட்டு சென்ற சுப்பையா, தமக்குஅரசு வழங்கியிருந்த காரையும், பாதுகாப்பு போலீசாரையும் மதியமே அனுப்பிவைத்தார்.


மாலை அரசு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.நெல்லை அரசு விழாவில் பங்கேற்ற செந்தமிழன், கருப்பசாமி ஆகியோர் பெயரளவுக்கு கூட புன்னகைக்குவில்லை.


விழாவும் அநியாயத்திற்கு அமைதியாக நடந்தது.  நெல்லைக்கு வந்த நேரத்தில் கூடுதல் பொறுப்பு கிடைத்ததற்காக மகிழ்வதா..மதியம் வரை உடன் இருந்து பார்த்த அமைச்சரை மாலையில் காணவில்லையே என வருத்தப்படுவதா என தெரியாமல் அமைச்சர் செந்தமிழன் டென்ஷனாகவே இருந்தார்.

No comments:

Post a Comment