Saturday, July 2, 2011

ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி



ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி


தமிழகத்தில் பொறியியல் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பிறப்பித்த விதிமுறைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


கடந்த 20 ஆண்டுகளாக, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, பிளஸ்-2-வில் 35 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று தமிழக அரசு நெறிமுறை வகுத்திருந்தது.
 
அதன் பின்னர், 2002-ம் ஆண்டு முதல், அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியரும் 35 சதவீதம் பெற்றிருந்தாலே போதும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நெறிமுறை வகுத்திருந்தது.

ஆனால், 2011-12-ம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவீதமும், இடஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மாணவர்கள் 45 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை வகுத்துள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டியல் இனத்தவர்(தாழ்த்தப்பட்டவர்கள்)/அருந்ததியர்/ மலைவாழ் பழங்குடியினர் ஆகிய வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் 35 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதமும், பொதுப் பிரிவினர் 50 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், ஏ.ஐ.சி.டி.இ. தற்போது வெளியிட்டுள்ள விதியின்படி பார்த்தால்,ஆதி திராவிடர்/அருந்ததியர்/ பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதியாக 45 சதவீதம் மார்க் பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த புதிய விதிமுறை, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதகமாக அமையும். எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14.6.11 அன்று டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது இதுசம்பந்தமான கோரிக்கை மனுவை அளித்தார். அதில், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு வகுத்துள்ள தற்போதைய விதிகளே பின்பற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


ஆனால் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. எந்த முடிவும் உடனடியாக எடுக்கவில்லை. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக துவங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பேரில், தமிழக அரசு 29.6.11 அன்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

 

இந்த மனுவின் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதிக்கான விதிமுறைகளையே பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு தடை வழங்கும்படியும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஏ.ஐ.சி.டி.இ.யின் விதிகளுக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழ்நாட்டில் ஏற்கனவே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியை பின்பற்றப்படுவதற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவின் மூலம் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலன் காக்கப்பட்டு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டது.


ஏழை, எளியவர்களின் பொறியியல் கல்வி கனவு நனவாவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment