Saturday, July 2, 2011

நடிகர் பிரபுதேவா விவாகரத்து வழக்கில் 7-ந் தேதி தீர்ப்பு


நடிகர் பிரபுதேவா விவாகரத்து வழக்கில் 7-ந் தேதி தீர்ப்பு

விவாகரத்து வழக்கில் நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி ரமலத்தும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.


நடிகரும், டைரக்டருமான பிரபுதேவா, குரூப் டான்சர் லதா என்ற ரமலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 1995-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ரமலத்தின் குடும்ப வாழ்க்கையில் நடிகை நயன்தாரா வடிவில் புயல் வீச ஆரம்பித்தது.


பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கிப் பழகினர். பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டதால், பிரபுதேவாவும், ரமலத்தும் விவாகரத்து செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்தனர்.
 
விவகாரத்து விதிமுறைப்படி, இருவருக்கும் 6 மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜுன் 30-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 30-ந் தேதி முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபுதேவா, ரமலத் இருவரும் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள்.
 
பிரபுதேவா வெளியூரில் இருப்பதால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்றும், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ரமலத் ஆஜராக முடியவில்லை என்றும் அவர்கள் காரணம் கூறினார்கள். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் இந்த மாதம் (ஜுலை) 10-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.


இந்த சூழ்நிலையில், வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியது இருப்பதால் வழக்கு விசாரணையை நேற்று (இன்று) எடுக்குமாறு நடிகர் பிரபுதேவா மனு தாக்கல் செய்தார். முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பு நீதிபதியான முதலாவது கூடுதல் முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பாண்டியன் மனுவை விசாரித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் பிரபுதேவா பிற்பகல் 3 மணிக்கு கோர்ட்டில் ஆஜரானார். சிறிது நேரத்தில் அவரது மனைவி ரமலத்தும் ஆஜரானார். பின்னர் இருவரும் சாட்சியம் அளித்தனர்.

 

விவாகரத்து மனுவில் கூறப்பட்ட விவரங்களையும், பிரபுதேவா தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு உதவும் வகையில் மனைவியிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்திருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களை நீதிபதி பாண்டியன் சரிபார்த்தார்.


பின்னர், மனு விவரங்கள் தொடர்பாக பிரபுதேவாவும், ரமலத்தும் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் ஒப்புதல் கையெழுத்திட்டனர். இந்த சட்ட நடைமுறைகள் முடிவடைவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது.

 

மாலை 5 மணிக்கு கோர்ட்டில் இருந்து பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனியே வெளியே வந்தனர். முன்னதாக, அவர்களின் வருகையையொட்டி கோர்ட்டு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரபுதேவா தலைகுனிந்தபடியே கோர்ட்டைவிட்டு வெளியே வந்தார். வாசலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதேபோல் ரமலத் மற்றொரு வாசல் வழியாக வந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment