Sunday, July 3, 2011

இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்



இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

 

அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் இலவச பஸ் பாஸ் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பள்ளி சென்றுவருவதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த பஸ் பாசை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இலவ பஸ் பாஸ் திட்டத்திற்கும் ஆகும் செலவை தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கிவிடும்.

 

ஆண்டுதோறும் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தினால் பயன்பெறுகிறார்கள். இதற்காக அரசு சுமார் ரூ.310 கோடி செலவு செய்கிறது.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் படிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில் சென்று போட்டோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டோ எடுக்கும் நாளில் பள்ளிக்கு வராதவர்களுக்கு புதிதாக ஒரு நாள் ஒதுக்கி படம் எடுக்கும் வகையில் அதிகாரிகள் மாற்று ஏற்பாடும் செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். தற்போது அரசு விழாக்கள் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக நடைபெற்று வருவதுபோல் இந்த நிகழ்ச்சியும் எளிமையான முறையில் நடக்கும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment