Wednesday, June 29, 2011
நீரிழிவு நோயாளிகள் சென்னையில் அதிகரிப்பு
நீரிழிவு நோயாளிகள் சென்னையில் அதிகரிப்பு
நீரிழிவு நோயை கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் டெல்லியில் நடந்தது. இதை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லியில் 31 லட்சம் குடிசைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், அவர்களிடம் இந்த நோய்கள் உள்ளனவா என்று கண்டறிய மருத்துவ சோதனைகளும் நடத்தப்படும்.
தொற்று நோய் வகையை சாராத, இருதய நோய், நீரிழிவு, கேன்சர், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்காக சோதனை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணி பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக நாடு முழுவதும் 20 ஆயிரம் துணை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 33 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களிடம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், போன்ற நோய்களை கண்டறியும் பரிசோதனைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சென்னையிலும், பெங்களூரிலும்தான் அதிகமாக உள்ளன. தற்போதுள்ள அளவைவிட விரைவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு, 3 லட்சம் பேரிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் 50 ஆயிரம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. தவிர 60 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 40 ஆயிரம் பேருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. கர்ப்பிணி பெண்களிடம் நடத்திய சோதனையில், 3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்று பேசினார்.
Labels:
அதிகரிப்பு,
சென்னையில்,
நீரிழிவு,
நோயாளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment