Tuesday, June 28, 2011
6 குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளிவைப்பு
6 குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளிவைப்பு
தர்மபுரி அருகே ஊரை விட்டு 6 குடும்பங்களை தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த குடும்பங்களை சேர்ந்த 25 பேர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த 6 குடும்பத்தினர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
’’நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ள அருந்தியர் காலனியில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதில் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் ஊரை விட்டு தள்ளி வைத்து உள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலனியில் உள்ள மாரியம்மன்கோவிலில் திடீரென 31/2 பவுன் தங்க நகை மாயமானது. அந்த நகையை எடுத்தது யார்? என தட்டி கேட்டதன் விளைவாக எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஊரில் உள்ள தண்ணீர் குழாயில் குடிநீர் எடுக்கவும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பிற குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் பேசினால் அவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது.
இத்தகைய செயல்பாடுகளால் 6 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஊர்திருவிழா தொடங்கி உள்ளது.
இந்த பண்டிகையில் எங்கள் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் சேர்த்து கொள்ளாமல் தள்ளி வைத்துள்ளனர். எனவே எங்களை தள்ளி வைக்க காரணமான காலனியின் முக்கிய பிரமுகர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.
நாங்களும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், ஊர் மக்களோடு சேர்ந்து வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இவர்கள் குடும்பமாக வந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்த காட்சி உருக்கமாக இருந்தது.
இந்த மனு தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Labels:
ஆண்டுகளாக,
குடும்பத்தினர்,
தள்ளிவைப்பு,
விட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment